GuidePedia

0
இறுதிக்கட்டப் போரின் போது இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சரணடைந்தவர்களை சரணடையவில்லை என கூறிய சட்டத்தரணி சமிந்த அத்துகோரலவை ஜனாதிபதி ஆணைக்குழுவின் சட்ட அலுவலராக நியமித்துள்ளமை கண் துடைப்பு வேலையாகும்.
காணாமற்போன மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களைத் தேடும் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாட்டினை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
 
காணாமற் போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, அதனைப் பார்வையிடுவதற்காக அனந்தி வந்திருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'காணாமற் போனோர்கள் சாட்சியமளிக்கும் இச்சந்தர்ப்பத்தில், சட்ட அலுவலராக சட்டத்தரணி சமிந்த அத்துகோரல அரசாங்கத்தினால் நியமித்திருப்பது எமக்கு புரியாத புதிராக இருக்கின்றது. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்ட போது, அரச தரப்பு சட்டத்தரணியாக எமக்கு எதிராக அவர் ஆஜராகியிருந்தார்.
 
இப்படியான ஒருவரை காணாமற் போனோர்களை கண்டறிவதற்கான சாட்சியமளிக்கும் நிகழ்வில் சட்ட அலுவலராக நியமித்திருக்கின்றார். இதனால் இவர் எவ்வாறு எமக்கு நீதியையும், நியாயத்தினையும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் பெற்றுத்தர போகின்றார்?' என்று கேள்வி எழுப்பினார்.
 
'இறுதிக்கட்டப் போரின் போது இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சரணடைந்தவர்களை சரணடையவில்லை என கூறியவரை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண் துடைப்பு வேலைக்காக வந்திருப்பது எமக்கு எந்தவித நியாயத்தினையும் பெற்றுத்தரமாட்டாது.
 
அதனால் இந்த உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதாக அமையாது என்றும், இதற்காக தான் நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றோம்.
 
மக்களின் பிரதிநிதியான என்னை ஜெனீவா செல்லவிடாது நிறுத்துவதென்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என நினைக்கின்றேன்.
 
அனந்திக்கு ஜெனீவா செல்வதற்கான விசா மறுப்பு என்ற பிரசாரத்தினை அரசாங்கம்; தென்னிலங்கை ஊடகங்களின் ஊடாகப் பரப்பி வருகின்றது. மக்களின் பிரதிநிதியான என்னை ஜெனீவா செல்வதற்கான விசா மறுப்பு என்று செய்தியினை வெளியிடுவதினால் மக்களின் பிரச்சினைகளை நான் ஜெனீவா மாநாட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான பொய்யான செய்தியினை வெளியிடுகின்றது. இது உண்மைக்குப் புறம்பான செய்தி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

 
Top