இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஐ.நா மனித
உரிமை ஆணையத்திடம் இந்தியா தனி தீர்மானம் அளித்திட வேண்டும் என தி.மு.க.
வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க
நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.
இதன்போது இலங்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு
காலப்பகுதியில் இடம்பெற்ற போரின்போது போர்க் குற்றம் இடம்பெற்றமை தொடர்பாக
ஐக்கிய நாடுகள் தலைமையிலான தன்னிச்சையான மற்றும் சர்வதேச விசாரணை நடத்த
ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், 2008 டிசம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கை
இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த
ஐ.நா. வின் கீழ் இயங்கும் தன்னிச்சையான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த
சர்வதேச விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக அரசுக்கு எதிராக
கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுவது
தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை நடைமுறை ஒன்றை அமைக்க
வேண்டும் என்ற 2 பரிந்துரைகளை முன்வைத்தனர்.
எதிர்வரும்மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா முன்நின்று தனித்
தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாக தி.மு.க.
எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment