GuidePedia

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கருணை மனு மீது முடிவெடுக்க மத்திய அரசு 11 ஆண்டுகள் தாமதம் ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டியது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக கூறிய நீதிபதிகள், இம்மூவரும் சிறையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறிய மத்திய அரசின் வாதத்தை நிராகரித்தனர்.

விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம்:

23 ஆண்டுகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சிறையில் இருப்பதால், அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூக்குத் தண்டனை வழக்குகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் கருணை மனு மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
வருங்காலத்தில் கருணை மனு மீது விரைவாக முடிவெடுக்கப்படும் என நம்புவதாகவும் தீர்ப்பின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
199‌1ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு 1998ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் நளினிக்கான தண்டனை, ஏற்கனவே ஆயுளாக குறைக்கப்பட்டது.

வழக்கு கடந்த வந்த பாதை:

ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
இதற்கான சதியில் ஈடுபட்டதாகக்கூறி 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தூக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்களின் கருணை மனுக்கள் 1999ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. எனினும், அதற்கடுத்த ஆண்டு, நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் தமிழக ஆளுநர் குறைத்தார்.
இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், தூக்கு தண்டனையை குறைக்க கோரி கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படாததை அடுத்து, 2006, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. கடந்த, 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, இவர்கள் மூவரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார்.
இதனையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011, செப்டம்பர் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. நெருக்கடி முற்றிய நிலையில், 2011, ஆகஸ்ட் 30ம் தேதி, தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 21ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் அளித்தது. கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் குடியரசுத் தலைவரால் கிடப்பில் போடப்பட்டதை காரணம் காட்டி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
கருணை மனுக்களை தேவையின்றி நீண்ட காலம் கிடப்பில் போட்டால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.
 
Top