வீட்டில் பிரச்சினையும் ஏற்படும் போது அப்பாவுடன் கதைக்காமல் பக்கத்து வீட்டில் உள்ள சித்தப்பாவுடன் கதைப்பதால் பிரச்சினை தீரப்போவதில்லை. இதுபோன்றே எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என்பதை வடக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை எமக்கு எவ்வித தாக்கத்தையும் செலுத்தப்போவது இல்லை. வட மாகாண சபையானது இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் கைபொம்மையாக மாறியுள்ளது. இதனால் வடமாகாண சபையை இழக்கவேண்டிய வழிவகைகளை அவர்களே தேடிக்கொள்கின்றனர்.
நமது நாட்டில் மழை பெய்யும் போது அமெரிக்காவில் குடை பிடிப்பதில் எவ்வித பயனும் இல்லை. வட மாகாண சபையினருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவே இருக்கிறோம். நாம் நீட்டும் சமாதான கரங்களை கடித்து விடக் கூடாது. எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment