களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக குறித்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் அவருடைய உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்படுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது மது அருந்திய நிலையில் குழப்பம் விளைவித்தது மாத்திரமின்றி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தாக்குவதற்கும் முற்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரிடமிருந்து அறிக்கையொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
இது தொடர்பாக பாலித தெவரப்பெருமவிடம் வினவிய போது
பாலித தெவரப்பெரும
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் தெரிவில் குற்றச்சாட்டுக்கள் அதிகளவு கொண்ட இருவரை தேர்தலில் களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்திருந்தது. என்னுடைய தொகுதியை சார்ந்த ஒருவருக்கு எனது அனுமதியின்றி எவ்வாறு போட்டியிடுவதற்கு அனுமதி வழங்க முடியும்.
எவ்வாறாயினும் குறித்த வேட்பாளர் தன்னுடைய பிள்ளைகளையும் மனைவியையும் வீட்டுக்கு உள்ளே வைத்து கதவடைத்தவர் . எனவே இவ்வாறான வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்கினால் கட்சிக்கே அவப் பெயர் ஏற்படும். இதனடிப்படையிலேயே கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்து கூறினேன்.
நான் பாராளுமன்ற குழு கூட்டத்திற்கு மதுபானம் அருந்தி வரவுமில்லை. தலைவருக்கு தாக்க முனையவுமில்லை.
இதேவேளை குறித்த காரணங்களுக்காக கட்சியிலிருந்து விலக போவதுமில்லை. அத்தோடு எங்களுடைய கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வது வழக்கமாகியுள்ளது என்றார்.

Post a Comment