இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய
இனப்பிரச்சினைக்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சர்வஜன
வாக்கெடுப்பினை நடத்தவேண்டும் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தமது வரவேற்பினைத் தெரிவிக்கின்றது என அக்கட்சியின்
பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ்
பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதியினுடையதும் அரசாங்கத்தினதும் தோல்வியும்
பிழைகளுமே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை
பிரயோகிக்கப்படுகின்றமைக்கான காரணங்களாக அமைகின்றன எனவும்
அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடயங்கள் தொடர்பாக வீரகேசரிக்குக்
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புலம்பெயர்
தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் சர்வசன
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தொடர்பில் கூறியுயள்ளார். இதனை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கின்றது.
இவ்விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆனால் இவ்விடயத்தில் முக்கியமாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின்
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தோல்வி கண்டுள்ளது. இதனால்
ஏனைய பல்வேறு தீர்மானங்களும் கருத்துக்களும்
முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் யுத்தத்திற்குப் பின்னர்
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக
அவர்கள் மேலும் மேலும் தமிழ், சிங்கள உறவில் விரிசல்களை
ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளையே செய்துள்ளனர்.
இன்றும் இராணுவ மயப்படுத்துகின்ற செயற்பாடுகள், சிங்களக்
குடியேற்றங்கள், தமிழர் பிரதேசங்களில் பௌத்தவிகாரைகள் போன்றன
மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற
பேச்சுவார்த்தைகள் தோல்விகளில் முடிவடைந்துள்ளன.
வட மாகாண சபையினைப் பொறுத்தவரையில் அவர்களுக்குரிய குறைந்தபட்ச
அதிகாரங்களைக் கூட வழங்காது சபையின் செயற்பாடுகளை
முடக்கிவிடப்படுகின்றனர். இதனால் முதலமைச்சரினால் மாகாண சபையின்
நிர்வாகத்தை பூரணமாக நடத்த முடியவில்லை.
ஒட்டுமொத்த இலங்கை அரசாங்கமும் தமிழ் விரோதப் போக்கையே
கடைப்பிடிக்கின்றது. இததான் யதார்த்தமான உண்மையாகும். இலங்கை
அரசாங்கத்தின் இவ்வாறான தோல்விகளே ஏனைய நாடுகளில் எமது
இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கான பல்வேறு முரண்பாடான
கருத்துக்கள் உருவாவதற்கு அடித்தளமாக அமைகின்றன.
அது மட்டுமன்றி இத்தகைய செயற்பாடுகள் எதிர்வரும் ஜெனிவா மனித உரிமை
சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தீர்மானத்தையும்
கொண்டுவருவதற்கு வழிகோலியுள்ளது.
இதனைக் கூட இலங்கை அரசாங்கமே உருவாக்கியுள்ளது. அரசாங்கம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை
முழுமையாக அமுல்படுத்தாமல் அதனை இழுத்தடிப்புச் செய்துள்ளமை
மற்றும் அதில் தோல்வி கண்டுள்ளமை போன்ற காரணங்களால் ஒரு சர்வதேச
விசாரணையை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒரு
பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது.
ஆகவே இதற்கான பொறுப்புக்களை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசாங்கம் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில்
தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருக்கின்றமையும் இனப்பிரச்சினையைத்
தீர்ப்பதில் தமக்கு எந்தவித தகுதியும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாலுமே
இவ்வாறான தீர்மானங்கள் சர்வதேச அளவில் நிறைவேற்றப்படுகின்றன.
எனவே இதனைப் பிறநாடுகளின் தவறுகளாகக் கருதமுடியாது. இலங்கை
ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தோல்விகளும் பிழைகளுமே இதற்குக் காரணமாக
அமைகின்றன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரு
ம்புகின்றது என்றார்.

Post a Comment