யாழ். நெடுந்தீவு தெற்குக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.
இந்த இந்திய மீனவர்கள் 29 பேரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
இந்தியாவின், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஜகதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 07 விசைப்படகுகளில் வந்த 29 இந்திய மீனவர்களையும் நேற்று புதன்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் இந்நிலையில் அவர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்கண்டவாறு உத்தரவைப்பிறப்பித்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

Post a Comment