பேசாலை உட்பட மன்னார் தீவுப்பகுதிகளில் கரையோரப்பகுதிகளில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வுகளை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி பேசாலை கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பேசாலை பகுதியில் எதிர்ப்பு பேரணியினை மேற்கொண்டுள்ளனர்.
-இன்று காலை 8.30 மணியளவில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பலி நிறைவடைந்த நிலையில் அங்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டனர்.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு முன் ஆரம்பமான பேரணி பேசாலை பஸார் பகுதியில் நிறைவடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ‘புனித ஞானப்பிரகாசியார்’ சிலையடிக்கு முன்பாக ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.
குறிப்பாக சிறுவர்களாகிய எமது எதிர்காலம் என்ன?,மண்ணை விற்று தின்பதை விட உன்னை விற்று தின்,சுற்றாடலை பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம், பிரதேச செயலாளரே மன்னார் தீவு உங்கள் கையில் அதில் மண் அகழ்ந்து அழிக்காதே, மன்னார் பிரதேச சபையே மன்னார் தீவை காப்பாற்று, மண்ணிற்குள் போகும் மன்னாரை காப்பாற்ற யாரும் இல்லையா?, போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
-இதன் போது பேசாலை கிராமத்தைச் சேர்ந்த அதிகளவான சிறுவர்களும் குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பேசாலை , தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததோடு தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார்.
-இதே வேளை வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா,வைத்தியகலாநிதி என்.குணசீலன்,மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ்,மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குலாஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரிகளுக்கும் அங்குள்ள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
-இதன் போது குறித்த பகுதிகளில் இடம் பெறுகின்ற சட்டவிரோதமான மண் அகழ்வு குறித்து கிராம மக்கள் சார்பாக உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறும், இப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்புபவர்களுக்கு எதிராக தான் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் காலை 10 மணியளவில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Post a Comment