GuidePedia

0

 
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆகாஸ் விடுதியில் இடம் பெற்ற விசேட சந்திப்பின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
 
குறித்த சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மனுவேல் செபமாலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்போட் உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன் போது மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி  மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத  மண் அகழ்வு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
 
இந்த நிலையில் சகல பிரச்சினைகள் தொடர்பிலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top