(ஆர்.ரஞ்ஜன்)
மலையகத்தில் நிலவி வரும் வரட்சி காரணமாக
மழை வேண்டு அம்மனுக்கு நீர் அபிஷேகம் செய்யப்பட்ட நிகழ்வு பொகவந்தலாவை
எல்படை பகுதியில் இடம்பெற்றது.
மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதால்
நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட கூடும் என்பதுடன் மலையகத்தின் பிரதான தொழிற்துறையான
தேயிலை துறையும் பாதிப்படைய கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே உடனடியாக மழையை தரவேண்டும் என இறைவனிடம் கோரும் நிகழ்வாக
பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் அம்மன் கோயில்களில் குடத்து நீர் ஊற்றும்
நிகழ்வுகள் தற்போது பரவலாக நடைபெற்று வருகின்றன.
ஆறு அல்லது நீருற்றுகளில் நீரை பெற்று அதை ஊர்வலமாக குலவை பாடலுடன் குடங்களில்
சுமந்து வந்து அம்மனுக்கு ஊற்றுவது மூலம் மழை பெய்யும் என்பது பரம்பரையான ஐதீகம்.
இந்த செயற்பாட்டினை பெரும் வரட்சிகாலங்களில் மலையக பகுதிகளில் காணமுடியும்.
தற்போது நிலவி வரும் கடுமையான வரட்சியினால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படும்
என்பதால் உடனடியாக மழை வேண்டியே குறித்த பகுதியில் பெண்கள் இவ்வாறு நீரை சுமந்து வந்து அம்மனை குளிர்விக்கின்றனர்.
